மௌனமாக இருப்பதைச் சாத்தியமற்றதாக்குகின்றன சம்பவங்களும், சூழ்நிலைகளும், அவற்றால் சூழப்பட்ட எமது இருப்பும்.
குரல் எழுப்புவதால் பயனேதும் இருக்குமா? என்ற ஐயம் விளைவித்த மௌன வெளியில், அதர்மம் இராஜ பேரிகை முழங்கிச் செல்கிறது ஊர்வலமாக...
அதன் பேரிரைச்சல் நியாயமாக வாழ்தல் காலப்பொருத்தமற்றதோ? என்ற இன்னுமொரு ஐயத்தை எழுப்புகிறது, மௌனித்தவர்களின் ஆன்மாக்களில்.
அரசும் அதன் இயந்திரங்களும் மட்டுமல்ல, எமது சமூகமும், சமூக நிறுவனங்களும், சமூக மாந்தரின் தனி நபர் நடத்தைகளும், அற நியமங்களைத் தொலைத்து விட்டு அந்தப் பேரிரைச்சலுடன் செல்லும் ஊர்வலத்தில் அள்ளுண்டு செல்கின்றன, அதன் கோஷங்களை உதடுகளில் ஏந்தியபடி.
இந்தப் பேரிரைச்சலை வலிதற்றதாக்க வேண்டுமெனின், முதலில் எம் மௌனப் பெரு வெளியை நிறைக்க வேண்டும்... நியாயங்களின் உரத்த குரல்களால்.
மௌனமாக இருப்பது அமைதியைத் தருவதற்குப் பதிலாக ஆன்மாவை அரிப்பதாக உணர்வதனால் மௌனம் கலைகிறோம் உணர்வொத்த சிலர்.
நியாயத்தின் குரலை ஓங்கி ஒலிப்பதற்காக......
மூடப் பட்ட உதடுகளையும், பேனாக்களையும் திறப்பதெனப் பிரதிக்ஞை செய்கிறோம், நிரந்தரமாக மௌனமாக்கப் பட்டவர்களின் நினைவாக...